அமீரகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை தொடர்ச்சியாக மீறுவோர் நாடுகடத்தப்படுவர் என்று மூத்த காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். “அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வது மற்றும் முன் அனுமதிச்சீட்டு பெறாமல் சாலைகளில் நடமாடுவது விதிமீறல் குற்றமாகும். தொடர்ச்சியாக இந்த குற்றங்களை செய்வோர் நாடுகடத்தப்படுவார்கள்” என்று துபாய் காவல்துறையின் குற்றவியல் துறைத்தலைவர் சயீத் அல் ஹஜேரி அவர்கள் அமீரகத்தின் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதுபோல ஊரடங்கு விதிகளை மீறுவோரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பலர் இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். இதன் விளைவு மிகவும் கடுமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
முன் அனுமதிச்சீட்டை துஷ்பிரயோகம் செய்தல்
அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல இணைய வழியாக முன் அனுமதிச்சீட்டு வழங்கும் முறை துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது. மருந்தகம் அல்லது மளிகை பொருட்கள் வாங்குவதற்காக முன் அனுமதிச்சீட்டு பெற்று பிற காரணங்களுக்காக அதனை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அதுபோல பணிக்கு செல்வோர் அலுவலக கடிதத்தை பயன்படுத்தி மற்ற விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதும் குற்றமாகும்.
வதந்தி பரப்புவோர் மற்றும் அமீரக விதிகளை கேலி செய்வோர்
கொரோனா வைரஸ் பற்றி தவறான வதந்திகளை பரப்புவோர் மற்றும் அமீரக அரசின் விதிகளை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஊரடங்கு நேரத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமீரக அரசின் விதிகளுக்கு உட்பட்டு நோய்த்தொற்றுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று ஹஜேரி கூறினார்.
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்